என் பற்றி

என் பெயர் த. வசந்தாள். என்னைப் பற்றிய விவரங்கள் தன் விவரக் குறிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியத்தின் மீது கொண்ட ஆழ்ந்த ஈடுபாடும், தொடர்ந்து கற்றறியும் மனப்பாங்கும் என்னை இலக்கியப் பயணத்தில் முன்னேற்றின.

கல்விப் பயணம்

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் முதுகலை மாணவராகவும் ஆய்வு மாணவராகவும் ஏழு ஆண்டுகள் தமிழ் கற்றேன். அங்கு நடைபெற்ற பொழிவுகள், அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், பயிற்சி வகுப்புகள், பணிமனைகள் மற்றும் கருத்தரங்குகள் எனது தமிழறிவை மேலும் வளப்படுத்தின.
ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் கற்பித்த ஆசிரியர்களும், இளங்கலை முதல் முதுகலை வரை பாடம் நடத்திய பேராசிரியர்களும் மிகுந்த நேர்த்தியுடன் கற்பித்தனர். அவர்களின் வழிகாட்டுதல் என் இலக்கியப் பார்வையை ஆழப்படுத்தியது.

ஆசிரியர் வாழ்க்கை

27 ஆண்டுகள் எதிராஜ் மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினேன். மாணவிகளுக்கு தமிழ் இலக்கியத்தின் ஆழத்தையும் அழகையும் பகிர்ந்த அனுபவம் என் வாழ்வின் முக்கியமான பகுதி.

பணி நிறைவு பெற்ற பிறகும் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கின்றேன். கற்றலும் கற்பிப்பும் என் வாழ்வின் தொடர்ச்சியான பயணமாகவே உள்ளது.

குறுந்தொகைக்கான பயணம்

என் கல்வி மற்றும் ஆசிரியர் அனுபவங்களே என்னை குறுந்தொகைக்கு ஒலி உரை சொல்லும் பணிக்குத் நெறிப்படுத்தின. சங்க இலக்கியத்தின் ஆழம், குறிப்பாக குறுந்தொகைப் பாடல்களின் நுண்ணுணர்வு, என்னை மிகவும் கவர்ந்தது.

ஏன் குறுந்தொகைக்கு ஒலி உரை?

குறுந்தொகைப் பாடல்கள் என் உள்ளம் கவர்ந்தவை. இந்நூலில் 307, 391 ஆகிய பாடல்கள் தவிர ஏனையவை 4 அடி முதல் 8 அடிவரை உள்ள சிறப்பான பாடல்கள் ஆகும். இவற்றை 205 புலவர்கள் பாடியுள்ளனர்.

பாடலடியால் பெயர் பெற்ற புலவர்கள் உள்ளனர்; பெயர் தெரியாத புலவர்களும் உள்ளனர். குறுகிய அடிகளில் ஆழமான உணர்வுகளையும் வாழ்க்கைச் சிந்தனைகளையும் வெளிப்படுத்தும் இந்தப் பாடல்கள், ஒலி உரை வடிவில் மக்களிடம் சேர வேண்டும் என்று எண்ணினேன்.

குறுந்தொகையின் சிறப்பு

குறுந்தொகை சங்க அக நூல்களுள் ஒன்று. உரையாசிரியர்கள் தங்கள் உரைகளில் அதிகமாக மேற்கோள் பாடல்களாக எடுத்துக்காட்டிய நூலாக இது விளங்குகிறது. சில நூற்றாண்டுகள் பரந்த கால எல்லையை உடைய பாடல்கள் வழியாக மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல் தமிழர்களின் வாழ்க்கையை அறிய முடிகிறது.

ஓர் அறிவு உயிர்கள் முதல் ஆறு அறிவு உடைய உயிர்கள் வரை நுட்பமான பதிவுகளையும் விவரிப்புகளையும் சுருக்கமாகச் சொல்லி விளக்குகிறது. ஐவகை நிலங்கள், அங்கு வாழ்ந்த மக்கள், வாழ்க்கை முறை, உணவு, தொழில், குறுநிலத் தலைவர்கள், வள்ளல்கள், நாடு, நகரம், சிற்றூர், பேரூர், நாகரிகம், பண்பாடு, இயற்கை அறிவு, வானவியல், வணிகம் போன்ற பல இலக்கியப் பதிவுகள் ஆலமர விழுதுகள் போல் விரிந்து நிற்கின்றன.

தமிழின் தொன்மை பற்றி அறிஞர்கள் தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கின்றனர். கீழடி ஆய்வு தொல் பழங்கால மக்களின் வாழ்க்கை முறையை ஆவணப்படுத்திக் காட்சிப்படுத்தியுள்ளது. குறுந்தொகைப் பாடல்கள் தோன்றிய காலத்தில் வாழ்ந்த மக்களின் புழங்குவெளி கடலைப் போல விரிந்திருந்தது.

குறுந்தொகை வழி அறிந்தவை

இலக்கியம் ஒரு மொழி பேசும் மக்களின் அடையாளம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, குறுந்தொகை நூல் தமிழரின் பண்பாட்டு அடையாளத்தை வெளிப்படுத்துகிறது.

குழுவாக வாழ்ந்த மக்கள் சமூகம், அகமாந்தர்கள் வழி தலைவன், தலைவி, தோழி, செவிலி, அன்னை, தலைவனுக்குப் பாங்கன், பாகன் போன்ற உறவுகள் வாழ்க்கையில் இன்ப துன்பங்களை பகிர்ந்து கடந்து செல்ல உதவிய உறவுகளாக இருந்தன.

குழுவுக்குள் தலைமைப் பண்பு மிக்க சான்றோர்கள், தலை மக்களின் காதல் வாழ்க்கை, உளவியல் நோக்கு, பாடுபொருள் ஆகிய அனைத்தும் குறுந்தொகையை மிகவும் கவர்ச்சிகரமாக மாற்றுகின்றன.

ஒலி உரையின் நோக்கம்

குறுந்தொகை ஒலி உரையாகவும் எழுத்துரையாகவும் விரிகின்றது. இது “கரும்பு தின்னக் கூலியாக அல்ல” — தொல் பழங்கால மக்களின் கவித்திறனையும் வாழ்க்கைச் செழுமையையும் அறிந்து கொள்ளவும், உலக மக்களுக்கு அறிவிக்கவும் செய்யப்படும் முயற்சி.

தமிழின் தொன்மை, சங்க இலக்கியத்தின் ஆழம், தொல் தமிழரின் வாழ்வியல் செழுமை ஆகியவற்றை அனைவரும் கேட்டு அறிந்து மகிழ வேண்டும் என்பதே இந்த ஒலி உரையின் நோக்கம்.