குறுந்தொகை: பாடல் 30
குறுந்தொகை 30ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
கேட்டிசின் வாழி-தோழி! அல்கல்,
பொய்வலாளன் மெய் உற மரீஇய
வாய்த் தகைப் பொய்க் கனா மருட்ட, ஏற்று எழுந்து,
அமளி தைவந்தனனே; குவளை
வண்டு படு மலரின் சாஅய்த்
தமியென் மன்ற அளியென் யானே!
''அவர் நின்னை வரைந்து கோடல் காரணத்தால் பிரியவும், நீ ஆற்றியிராது,ஆற்றாயாகின்றது என்?'' என வினாய தோழிக்குத் தலைமகள்,''யான் ஆற்றியுள்ளேனாகவும், கனவு வந்து என்னை இங்ஙனம் நலிந்தது’ எனக் கூறியது
கச்சிப்பேட்டு நன்னாகையார்
கேட்டிசின் - கேள்/கேட்பாயாக (சின் முன்னிலை அசை)
வாழி -அசைநிலை
அல்கல் -இரவு
மெய்யுற மரீஇய - மருவுவது போலத்தோன்றும் கனவு
வாய்த்தகை- உண்மையாம் தன்மை (நனவு)
மரீஇய - மருவிய/புணர்ந்த
மருட்டல் -மயக்குதல்
அமளி -படுக்கை
தைவருதல்- தடவிப்பார்த்தல்
சாஅய் -நலிந்து
தமியென் -தனியேன்
மன்ற -உறுதியாக
அளியென்- இரங்குதற்குரியேன்
மரீஇய - சொல்லிசை அளபெடை
சாஅய் - இசைநிறை அளபெடை
