குறுந்தொகை: பாடல் 185
குறுந்தொகை 185 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
''நுதல் பசப்பு இவர்ந்து, திதலை வாடி,
நெடு மென் பணைத் தோள் சாஅய், தொடி நெகிழ்ந்து,
இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும்'' எனச்
சொல்லின், எவன் ஆம் தோழி! பல் வரிப்
பாம்பு பை அவிந்தது போலக் கூம்பி,
கொண்டலின் தொலைந்த ஒண் செங் காந்தள்
கல்மிசைக் கவியும் நாடற்கு, என்
நல் மா மேனி அழி படர் நிலையே?
தலைமகன் இரா வந்து ஒழுகா நின்ற காலத்து வேறுபட்ட தலைமகளை, ''வேறு பட்டாயால்'' என்றாட்குக் கிழத்தி உரைத்தது.
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
இவர்தல் - ஊர்தல்
திதலை - தேமல்
வாடி (வினை) - பொலிவு இழந்து, நிறம் குன்றி
பணைத்தோள் - மூங்கில் போன்ற தோள்
சாஅய் - மெலிந்து
இன்னள் - இத் தன்மையள்
பை - படம்
கொண்டல் - கிழக்குத் திசையில் இருந்து வீசும் காற்று
கவி (வினை) - மூடுதல், குவிதல், கீழ் நோக்கி இறங்குதல்
அழி படர் - மிக்க துன்பம்
